Wednesday, October 20, 2010

எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரியும் (2 ).

விடுதலை முழக்கம் - சமீரா மீரான்
மேடைப் பேச்சு என்பது ஒரு கலைவடிவம். அதை எல்லோராலும் சரியாக கையாள முடியாது. அதனால் எல்லோரும் அதில் வெற்றி பெற்றதும் இல்லை.  ஆனால்  வெற்றிபெற்றவர்கள்  அனைவரும்  வரலாற்றை  புரட்டி  போட்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. தமிழ் நாட்டில் ஒரு இயக்கமே மேடைப் பேச்சை வளர்த்தது. மேடைப்பேச்சால் அந்த இயக்கமும் வளர்ந்தது.  தந்தை பெரியாரைத்  தலைவராகவும்  பேரறிஞர் அண்ணாவைத் தளபதியாகவும்   கொண்டு  வளர்ந்த திராவிட இயக்கம்தான் மேடைபேச்சை மிகச்சிறந்த முறையில் பரப்புரைக்காக  பயன்படுத்தியது.   அறிஞர் அண்ணாவின் மேடைப்பேச்சு புதுக் கவிதை என்றால்,  தந்தை பெரியாரின் பேச்சு நாட்டுப்புறப்பாடல். இரண்டும் மக்களுக்கு இனித்தது.  அண்ணா நிறுவிய திராவிட முன்னேற்ற கழகம்   மேடைப்  பேச்சின்  வலிமையை மக்களுக்கு உணர்த்தியது. அண்ணா காலத்தில் திராவிட இயக்கத்தின் அனைத்துத் தலைவர்களுமே சிறந்த பேச்சாளர்களாக திகழ்ந்தார்கள். தமிழியக்க அறிஞர்களும் மேடைப் பேச்சில் வல்லவர்களாகவே இருந் தார்கள். பொதுவுடைமை இயக்கத் தலைவர்  தோழர் ஜீவாவின் பேச்சு பாட்டாளி மக்களை தட்டி எழுப்பிய இடிமுழக்கம். அவர்களின் அரசியல் விமர்சனங்கள் சுவைக்கத் தக்கவையாக இருந்தன. இலக்கியப் பேச்சுகள் இன்பம் தந்தன.  அவர்களுடைய பேச்சைக் கேட்க இளைஞர்கள்  பெருந்திரளாய் கூடினார்கள். இந்த பேச்சாற்றலை  வலிமையான  ஆயுதமாக பயன் படுத்திதான் தலைவர்கள் அன்று இந்தி எதிர்ப்புப் போரை  நடத்தினார்கள்.  அதே மேடைப் பேச்சு இனவிடுதலைப் போராட்டத்தில் இன்று பயன்படாமல் இருக்கிறது.   
பேச்சுக்கலையில் வல்லவர்களாக 
பலர் இன்று வலம் வருகிறார்கள்; பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். ஆனால் தமிழ் இளைஞர்களிடம் எழுச்சியைக் காணோம்.    
நிகழ்கால அரசியல் நிகழ்வுகளும், ஊடகங்களும் இனவுணர்வை மழுங்க செய்திருக்கிறன என்பதை எவரும் மறுக்க முடியாது.
இந்த நிலையைப்  பயன்படுத்திக்கொண்டு வடநாட்டு ஆட்சியை 
மீண்டும் தமிழ் நாட்டில் கொண்டு வந்திட ஒரு கூட்டம் முனைப்போடு பணியாற்றி வருகிறது.   
'ஆங்கிலேயரை மிரட்டி அரச உரிமையைப் பெற்று அதை
அக்கிரகாரத்துக்குதானம்  தந்துவிடுவதா? அழகாகுமா? ஆண்மையாகுமா ? என்ற தன்மான மொழி கேட்கிறது. திராவிட அரசுரிமையைப் பெற ஊனுடல் கேட்பினும் தரத்  தயங்கேன் என்ற வீரவுரை எழும்பிவிட்டது.'  என்று அண்ணா சொன்னதை நம் நெஞ்சம் நினைக்கிறது.
'பொருளாதார பலமும், பிரச்சார வசதியும், ஆயுதபலமும், அந்தணரின் ஆசிர்வாத பலமும் அமோகமாகக் கொண்டுள்ள வடநாட்டு ஏகாதிபத்தியத் தொடர்பை
அறுத்துக் கொண்டு, முப்புறக் கடலும், எப்புறமும் வளமும் அதனைப் பயன்படுத்தும்
நாலரைக்  கோடி (இன்று ஆறரைக் கோடி) மக்களும் கொண்ட திராவிடம் தன்னாட்சி பெற்றாக வேண்டும். அதுவே விடுதலைப் போரின் குறிக்கோள்' அண்ணா சொன்ன குறிக்கோளை முன்னெடுத்துச் செல்லும் காலம் தமிழ்நாட்டில்
மீண்டும் வருமா? என்ற ஏக்கம் பலரது நெஞ்சில் எழத்தான் செய்கிறது.
அறிஞர் அண்ணா வாழ்ந்தவரையில் வடவர் ஆட்சிக்கு எதிரான சிந்தனை மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்திருந்தது. வடக்கிலிருந்து ஆட்சி செய்தோரை
தமிழ் மண்ணிலிருந்து விரட்டினார் அண்ணா.  ஓடிப்போனவர்கள் மீண்டும் வந்து தமிழ் மண்ணில் ஒட்டிக்கொள்ள திராவிட இயக்க எதிரிகள் செய்த சூழ்ச்சிதான் எம். ஜி. ஆரைக் கொண்டு திராவிட இயக்கத்தை  உடைத்தது.
உண்மையான சகோதர யுத்தம் அப்போதுதான், அதிலும் தமிழ்நாட்டில்தான் முதன் முதலில் தொடங்கியது. ஆரியர்களின் துணையுடன் திராவிட இயக்கத்தின் ஒரு பிரிவுக்கு தமிழரல்லாத எம். ஜி. ஆர். தலைவர் ஆகிறார். அந்தத் தொடக்கம், அண்ணாவின் பெயரிலான திராவிட இயக்கம் என்று சொல்லப்படுகிற  அந்த இயக்கத்திற்கு ஆரியரான ஜெயலலிதா தலைவராவதில் வந்து முடிந்தது.   இனவுணர்வு மிகுந்த திராவிட இயக்கத் தமிழ்ச் சகோதரர்களில் ஒரு பிரிவினர் 
உணர்வு மிக்க திராவிட இயக்கத் தலைவரான கலைஞருக்கு எதிராக
திருப்பப்பட்டனர். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டு அரசியல் கலைஞரை மய்யப்படுத்திதான் நடந்து வருகிறது. தமிழ் நாட்டில் எத்தனையோ  அரசியல் கட்சிகள் இருந்தாலும், அவற்றிற்கென்று தனித்தனி கொள்கை கோட்பாடுகள் இருப்பதாக
சொல்லப் பட்டாலும்,  தமிழ் நாட்டில் இரண்டே இரண்டு பிரிவாகத்தன் அரசியல் நடைபெற்று வருகிறது. ஒன்று கலைஞர் ஆதரவு அரசியல். இன்னொன்று கலைஞர் எதிர்ப்பு அரசியல். கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டு அரசியல் தனிமனித விருப்புவெறுப்புகளை முன்னிறுத்தியே நிகழ்வதால். தமிழர் மொழிசார்ந்த இனம்சார்ந்த போராட்டங்களில் ஒன்று பட முடியாமல் போய்விட்டது.
எம். ஜி. ஆர். தனிக்கட்சி தொடங்கிய பிறகு  மேடைப்
பேச்சின்   போக்கே மாறியது. எதிர்கட்சியினரை  இழித்தும் பழித்தும் பேசுவது ம், தங்கள் தலைவரை அளவுக்கு அதிகமாக வாழ்த்திப் பாராட்டுவதுமாகவே பெரும்பாலும் மேடைப் பேச்சுகள் மாறின.      இரண்டு பக்கங்களிளும் இந்த வசவுகளும் பாராட்டுகளும்  தொடர்ந்தன; இன்றுவரை தொடர்கின்றன. 
எம். ஜி. ஆரிடம் பல சிறந்த பண்புகள்  இருந்ததாக  பலர் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். ஆனால். திராவிட இயக்கத் தமிழர்களின் ஒற்றுமை சிதைவதற்கு அவரே காரணாமாக இருந்தார். 
வடபுலத்தை எதிர்த்து நிற்க அண்ணா சேர்த்து வைத்த ஆற்றலின் ஒரு பகுதி எம். ஜி. ஆரால் அழிக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலையிலும் மத்திய அரசு கொண்டு வந்த நெருக்கடி நிலையை எதிர்த்து, தமிழர்களின் தன்மான  உணர்வு குறைந்துவிடவில்லை என்பதை  நாட்டுக்கு உணர்த்தினார் கலைஞர்.  அதே வேளையில் எம். ஜி. ஆர். நெருக்கடி நிலையை ஆதரித்தார்.  இந்திரா காந்திக்கு நெருக்கமானார்.  அதன் பிறகுதான் தமிழ் நாட்டு அரசியலில் வடக்கும் தெற்கும் கூட்டாக தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. கொள்கை அரசியல் பின்னுக்கு தள்ளப்பட்டது.
கூட்டணி மாற்றங்கள் திராவிட இயக்க அடிப்படை கொள்கைகளை அசைக்கத் தொடங்கியதால் அரசியல் மேடைப் பேச்சின் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.     
இலக்கியங்களையும் வரலாற்றையும் சான்றுகாட்டி பேசுவது அருகிப் போனது. பட்டிமன்றங்களும், கவியரங்கங்களும் வியாபாரத்தை பெருக்கும் விளம்பரப் பொருள்களாகின.  வாழ்நிலை மாற்றங்களும் சூழ்நிலை மாற்றங்களும் மேடைப் பேச்சை பொலிவிழக்க செய்துவிட்டன.  காசு கொடுத்து பேச்சைக் கேட்க மக்கள் வந்த காலம் போய், இப்போது காசை வாங்கி கொண்டு மந்தைகளாய் மக்கள் வந்து நிற்கும் காலம் வந்துவிட்டது. கலை, இலக்கியம், கொள்கைவழி அரசியலில் இருந்து மக்கள் வெகு தூரம் போய்விட்டார்கள்.

ஒவ்வாத கூட்டணிகளால், கொள்கை முழக்கங்கள் செய்யும் மேடைகளாக அரசியல் மேடைகள் இல்லாமல் போய்விட்டதால், இலக்கிய மேடைகளை பயன்படுத்தி  சிலர் இயக்க கொள்கைகளை பேச முயற்சிக்கும்போது ஏதோ ஒரு அரசியல் அங்கே புகுந்து அது தனிமனித விருப்பு வெறுப்பின் வெளிப்பாடாக ஆகிவிடுகிறது. இவற்றையும் மீறி    எல்லா துறைகளிலும் உள்ளவர்கள் அத்தகைய இளைஞர்களின் உணர்ச்சியை மட்டுமே தூண்டி ஒரு குறிப்பிட்ட தலைவருக்கு எதிராக அல்லது ஆதராவாக அவனை சிந்திக்க வைத்து தங்களுடைய அரசியல் விருப்பு வெறுப்புகளை தீர்த்துக் கொள்கிறார்கள். இதனால், வளரும் இளைஞனால் தனிமனிதர் சார்ந்த  
 அரசியல் கலப்பில்லாமல் சிந்திக்க முடியவில்லை.
.
நல்ல பேச்சாளர்கள் ஏதோ ஒரு அரசியலுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் அனைவரும் விரும்பும் பேச்சாளர்களாக அவர்களால் இருக்கமுடியவில்லை. அல்லது அவர்களது  பேச்சை சிலரோ பலரோ  விரும்புவதில்லை. ஒரு தலைவரை, அவருடைய கட்சியை புகழ்ந்து பேசுவது எப்படி அரசியல் பேச்சு என்று கருதப்படுகிறதோ, அதே  போன்றுதானே  அவரை  இகழ்ந்து  பேசுவதும்.   சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால் ஒரு தலைவரை எவ்வளவு இழிவாகவும் ஒருவர் பேசலாம்;  அது அரசியல் இல்லையாம். ஆனால் அவரைப் புகழ்ந்து பேசினால் அது அரசியலாகிவிடுகிறது. கருத்துரிமையைப் போற்றுகிறவர்கள் புகழ்ச்சி, இகழ்ச்சி ஆகிய  இரண்டையும் மறுக்க மாட்டார்கள். ஆனால் எங்கே, எதைப் பேசுவது என்று ஒரு இங்கிதம் வேண்டும்; பேச்சிலே ஒரு கண்ணியம் வேண்டும். மேடை அறிந்தும், வந்திருக்கும் பார்வையாளர்களைப் புரிந்தும் பேசவேண்டும். அறிவும், நல்ல உணர்வும் தமக்கு மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொண்டு பேசும் போக்கு ஒத்த,   உணர்வு உள்ளவர்களாலும் போற்றப்படாது. தங்கள் மனதை அரிக்கும் 
ஒன்றைப் பற்றிப் பேசுவதற்கு
உரிய மேடையாக அது இல்லை எனில் அது பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். அந்த அரிப்புக்குரிய மேடையைத் தேட வேண்டும் அல்லது அதற்காக ஒரு கூட்டத்தை நாமே  ஏற்பாடு செய்து பேசவேண்டும். இதைத்தான் நல்லவர்கள் செய்வார்கள். பகுத்தறிவு உள்ளவர்கள் 

இப்படித்தான் சிந்திப்பார்கள்
அரசியலை கடந்து அன்று மொழி உணர்வாளர்கள் ஒன்றுபட்டு நின்றபோது மொழி விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது. இன்று  அரசியல் புதை மண்ணில் சிக்கிக் கொண்டு இனவுணர்வாளர்கள் பிரிந்து கிடப்பதால் இனவிடுதலைப் போராட்டம் வெற்றிபெற முடியவில்லை.
தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டம் வெற்றிபெற நாம் என்ன செய்ய வேண்டும்?

மொழிஅரசியலும், இனஅரசியலும் பொதுவானது. அந்த அரசியல் தவிர்க்கப்பட வேண்டிய அரசியல் இல்லை. இளைஞர்கள் அந்த அரசியலில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்ற உண்மையைச்  சொல்லி இளைய சமுதாயத்தை வழிநடத்த பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் முன்வர வேண்டும்.  தனிநபர் சார்ந்த எதிர்ப்பு உணர்வுகளை மறந்து இனமானம் காக்கும் தகுதியுள்ள தலைவர்களெல்லாம் ஓரணியில் சேர  வேண்டும்  மீண்டும் அந்த விடுதலை முழக்கம் விண்ணதிர ஒலிக்க வேண்டும்!. தமிழினம் விடுதலை பெற வேண்டும்.  எ
ழிலோடும்  எழுச்சியோடும்  பேசக்கூடியவர்கள் பலர் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் .  அவர்களின் பேச்சைக் கேட்க விரும்பி வருவோரின் எண்ணிக்கைதான் குறைந்து கொண்டே போகிறது. இன்று எங்கும் அரசியல், எதிலும் அரசியல் நுழைந்து விடுகிற காரணத்தினால் வளரும் இளைஞர்கள் மிகுந்த குழப்பத்துக்கு உள்ளாகி, இதெல்லாம்  நமக்கு வேண்டாம் என்று பொழுது போக்கு நிகழ்வுகளை தேடி போய் விடுகின்றனர். அவர்களிடம் பொதுநலச் சிந்தனையே வருவது இல்லை. பொது வாழ்க்கைக்கு என்று வருகிற  இளைஞன்  அறிவுப்பூர்வமாக  அணுகப்படாமல் உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமேஅணுகபபடுகிறான்.
அதனால் இலக்கிய மேடைகளிலும் நல்ல உணர்வுகளை வளர்க்கும்
செய்திகள் பேசப்படுவதில்லை. வெறும் நகைச்சுவை மேடைகளாகவும்
பொழுதுபோக்கு மேடைகளாகவும் இலக்கிய மேடைகள் மாறிவிட்டன.
மேடைப் பேச்சையே இன்று மக்கள் விரும்புவதில்லை என்ற முடிவுக்கு நாம் வந்து விட முடியாது. ஏனென்றால் ஆன்மீக உரைகளைத் தேடி மக்கள் இன்று கூட்டம் கூட்டமாய் சென்று வருவதை நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம். மக்களை, குறிப்பாக இளைஞர்களை,  தங்கள் பக்கம் திருப்ப கலை, இலக்கிய அரசியல் சொற்பொழிவாளர்கள், சமூக இயக்கச் சிந்தனையாளர்கள் பேச்சு மேடைகளை இன்னும் வலிமையுடைய மேடைகளாக மாற்ற வேண்டியது
இன்றைய முக்கியத் தேவையாக இருக்கிறது.
அந்த மேடைகளில் ஒலிக்கும் விடுதலை முழக்கங்ககள்தாம் இனமானத்தை மீட்டேடுக்க தமிழர்களை ஒன்றுபடுத்தும்.    

Friday, August 20, 2010

எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரியும் (1) - சமீரா மீரான்

கலைஞரே எனக்கு ஆசிரியர்

                          இன்று ( 20 / 08 / 2010 ) எனது 57 வது பிறந்த நாள். தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எனது நெடுநாளைய விருப்பத்தை இன்று செய்யத் தொடங்குகிறேன். சொந்த ஊரான நெல்லை ஏர்வாடி, அரசியல் கூட்டங்களுக்கு பிரபலமாக இருந்த ஊர். எங்கள் ஊரில் சிறு வயதில் என்னைக் கவர்ந்த இடம் எங்கள் தெருவில் ( 6 வது தெருவில்) உள்ள மீலாது மைதானம். அங்கேதான் பொதுக் கூட்டங்கள் நடைபெறும். ஒலிபெருக்கிகளில் ஒலித்த பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் பதிவு செய்யப்பட்ட சொற்பொழிவுகளும், இனமுரசு நாகூர் இ. எம். அனிபா அவர்களின்   இயக்கப்  பாடல்களும்   இன்றும்  காதுகளில்  ஒலித்துக்  கொண்டிருக்கின்றன.  
              பள்ளியில் படிக்கும்போதே எங்கள் ஊரின் பிரபல மேடை பேச்சாளர்கள் திரு. ஆ. மீ. அலிசேக் மன்சூர், திரு. என். பி. எம். அப்துல்காதர், திரு. 'கோடையிடி' காஜா, திரு. மஸ்த்தான், திரு. அனிபா போன்றோரின் மேடைப் பேச்சுகளையும்  கேட்டு  பேச்சாளனாக வேண்டும்  என்ற விருப்பம் துளிர்த்தது. அதன்  விளைவால்  ஆறாம் வகுப்பு முதல் பள்ளியில் நடைபெற்ற  அனைத்துப்  பேச்சுப்  போட்டிகளிலும் பங்கு பெற்றேன். முதல் பரிசு என்று இல்லாவிட்டாலும் ஏதேனும் ஒரு பரிசு கிடைத்து விடும்.
               எனது அருமை நண்பர், இன்றைய மும்பைப் புறநகர் திமுக நிர்வாகிகளில் ஒருவரும் எங்கள் ஊரின் தி. மு. கழகக் காவலராக இன்றும் திகழும் திருமிகு. ஆ. மீ. அலிசேக் மன்சூர் அவர்களின் மைந்தனுமான  தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. அலிசேக் மீரான் எனது பள்ளித் தோழர். என்னைவிட ஒரு ஆண்டு இளையவர். பள்ளியில் நடைபெறும் பெரும்பாலான  போட்டிகளின் முதல் பரிசுகளை அள்ளிக்கொண்டு போய்விடுவார்.
                ஆறாம் வகுப்பில் ஒருமுறை பாரதியார் பற்றிய பேச்சுப் போட்டியில் பேசுவதற்கு மேடை ஏறியதும், உடுத்திருந்த லுங்கி ( அப்போதெல்லாம்  மாணவர்கள் பலரும் லுங்கி அணிந்துதான் பள்ளிக்குப் போவோம், எங்கள் ஊரில் லுங்கியை 'சாரம்' என்றும், 'கைலி' என்றும் அழைப்பார்கள்) அவிழ்ந்து விட, உடுக்கை இழந்தவன் கை தனது பணியை மிகச் சரியாக செய்தும்,  மாணவர்களும் பிற பார்வையாளர்களும் 'கொல்' என்று சிரித்து விட்டார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல்  மனப்பாடம் செய்திருந்ததை முழுவதும் பேசிவிட்டுத்தான்  கீழே இறங்கினேன். கிழே இறங்கி வந்ததும் விழாவுக்கு வருகை தந்திருந்த
திரு என். பி. எம். அப்துல்காதர் என்னைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினார். அப்போது அவர் சொன்னதுதான் பேச்சாளனாக மட்டுமல்ல  எழுத்தாளனாகவும் வரவேண்டும் என்ற என்ணத்தை எனக்குள் விதைத்தது.
இன்றைய தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் என் உள்ளத்தில் இடத்தைப் பிடித்தது அன்றுதான்.
"மீரா சாகிப்" (என்னுடைய முழுப் பெயர் முகைதீன் மீரா சாகிப்) என்று அழைத்து அவர் சொன்னார் "நீ பேசும்போது உனது பல்வரிசை கலைஞர் பல் வரிசையைப் போல் இருக்கிறது" என்று. அந்த நிமிடமே நான்  என்னைக்  கலைஞராகவே   நினைத்துக்  கொண்டேன். கலைஞரைப் பற்றி அந்த  சிறு வயதில்  உனக்கு  என்ன தெரியும் என்று கேட்டு விடாதீர்கள். எங்கள் ஊரே தி. மு. க. வின் கோட்டையாக இருந்த நேரம். அண்ணாவைப் போல், கலைஞரைப்போல் பேசிக்காட்டுவதுதான் என்னைப் போன்ற  சிறுவர்களின் அன்றைய  பொழுது போக்காக இருந்தது. பேசுவதில் ஆர்வம் இல்லாதவர்கள் எம். ஜி. ஆரைப் போல வாள் வீசிக் காட்டுவார்கள், அல்லது நடித்துக் காட்டுவார்கள். இன்றைய தாய்மார்கள் குழந்தைகள் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டு  மகிழ்கிறார்கள்;  அன்றைய தாய்மார்கள் குழந்தைகள் தலைவர்களைப் போல பேசிககாட்டுவதை கேட்டு மகிழ்ந்தார்கள்.
             திரு. என். பி. எம். அவர்கள் வீட்டில் திராவிட இயக்க இதழ்கள் ஏராளமாக வந்து குவிந்து கிடக்கும். அவற்றில் வெளியிடப் பட்டிருக்கும்   அண்ணாவின் பேச்சு ,   கலைஞரின் பேச்சு, அல்லது அவர்கள் எழுதிய கட்டுரைகள்   போன்றவற்றை  அவர்கள்  குரலிலேயே சத்தமாக  படித்துக் காட்டுவோம்.  நாங்கள்  படித்தது  எப்படி  இருந்தாலும்  திரு. என். பி. எம் கைதட்டி பாராட்டுவார். எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் வீடு என். பி. எம். அவர்கள் வீட்டுக்கு  மிக அருகில்  இருந்ததால்  பெரும்பாலான  நேரம் அவருடைய  வீட்டில்தான்  பொழுதைக்  கழித்து  வந்தோம்.  மாணவர்களிடம் அவர் இனிமையாகப் பழகக் கூடியவர். அதனால்  அவரோடு  மாணவர் கூட்டம் ஒன்று எப்போதும் இருக்கும். அவரை 'நெல்லைக் கலைஞர்' என்றுதான் பலர் அழைப்பார்கள்.  அவர் வீட்டு வாசலிலேயே   சில நேரங்களில்  கலைஞர் எழுதிய மனோகரா, பராசக்தி  வசனங்களைப் பேசி நடிப்பதுண்டு  . கலைஞரின்  நாடகங்களுக்கும் திரைப்பட வசனங்களுக்கும் அப்போது  பள்ளிக் கூடத்திலும் அனுமதி
கிடைத்தது.  அப்போதே சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்று ஊர், உலகத்தால் போற்றப்பட்ட கலைஞரின் பல்வரிசையைப் போன்று என் பல்வரிசை இருக்கிறது என்று சொல்லக் கேட்டதாலேயே பெருமை கொண்டு, கலைஞரின் வசனங்களை, எழுத்துகளை, சொற்பொழிவுகளை தேடித்தேடிப் படித்து,  நானும் கலைஞரைப் போல சிறந்த பேச்சாளனாக,  எழுத்தாளனாக வரவேண்டும் என்ற எண்ணம் அப்போதே என்னுள் எழுந்துவிட்டது.  பெரியாரும் அண்ணாவும் என் சிந்தனைக்குள் வருவதற்கு முன்னதாகவே கலைஞர் வந்து விட்டார். அதற்கு அந்த ஒரு நிகழ்வுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அன்றுமுதல் இன்றுவரை எனது கலை, இலக்கிய, அரசியல் தளத்தில் கலைஞரே எனக்கு ஆசிரியர்.                 
இப்போது நான் பேசத்தெரிந்து கொண்டேன், ஆனால் பேச்சாளன் ஆகிவிட்டேனா? என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது நான் எழுதத் தெரிந்து கொண்டேன், ஆனால் எழுத்தாளன் ஆகிவிட்டேனா? என்று எனக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, தொடர்ந்து எழுதுவது என்று முடிவு செய்துவிட்டேன்              (தொடரும்)